பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
11:07
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மாயமான சிலையை கண்டுபிடிக்க, டி.எஸ்.பி., தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என, எஸ்.பி., பொன்னி கூறினார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கடந்த, 10ல், போலீஸ் எஸ்.பி., பொன்னியிடம் புகார் மனு அளித்தார். அதில், கோவில் பதிவேட்டில் உள்ள, ஒன்றேகால் அடி உயரமுள்ள தண்டாயுதபாணி சிலை, ஒரு வேல் ஆகியவை தற்போது இருப்பில் இல்லை. இவை கடந்த, 1959ல், ஏதோ ஒரு துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கோவில் பதிவேட்டில் உள்ளது. எந்த துறை என்ற சரியான விபரம் இல்லை. இதை கண்டறிந்து, சிலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்த டி.எஸ்.பி., குணசேகரன் தலைமையில், ஐந்து பேர் கொண்ட தனிப்படை, கோவிலில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், சிலைகள் குறித்து முதன் முதலாக, 1952ல், பதிவேடு உருவாக்கப்பட்டு, 122 சிலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், தற்போது காணாமல் போன சிலை மற்றும் வேல் ஆகியவை, 1959ல், வேறு துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த துறை என்ற விபரம் தெரியவில்லை.
இது குறித்து, எஸ்.பி., பொன்னி நிருபர்களிடம் கூறியதாவது: சிலைகள் இல்லாதது குறித்து, விசாரணை நடத்த டி.எஸ்.பி., தலைமையில், குழு விசாரித்து வருகிறது. சிலைகள் திருட்டு போகவில்லை. கோவில் நிர்வாகத்தால், வேறு துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எழுதி வைக்கப்பட்டுள்ள விபரங்களை ஆய்வு செய்து, யாருடைய கையெழுத்து என ஆய்வு செய்து, பின்னர் எந்த துறைக்கு கொடுக்கப்பட்டது என கண்டறியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.