பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
04:07
மேட்டூர்: தட்சிணாயன புண்ணிய கால, துவக்க நாளான இன்று பக்தர்கள், புதுமண தம்பதியர் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
தை முதல், ஆனி மாதம் வரையிலான ஆறு மாதம், உத்ராயண புண்ணியகாலம், ஆடி முதல், மார்கழி மாதம் வரையிலான, ஆறு மாதம், தட்சிணாயன புண்ணியகாலம் என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆறு மாத உத்ராயண காலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் வடக்கு திசைக்கு இடையே உதயமாகும். ஆறு மாதம் தட்சிணயான புண்யகாலத்தில் சூரியன் கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு இடையே உதயமாகும். பாரதத்தின், ஏழு புண்ணிய நதிகளில் தட்சிணாயன புண்ணியநதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு. புண்ணியகாலம் துவங்கும் ஆடி,1 ஆன இன்று மேட்டூரில் குவிந்த பக்தர்கள் காவிரியாற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். திருமணத்துக்கு பின் வரும், முதல் ஆடி மாதத்தை புதுமண தம்பதியர் தலைஆடியாக கொண்டாடுகின்றனர். தலைஆடியை முன்னிட்டு புதுமண தம்பதியர் பலர் தங்களின் மணமாலைகளை காவிரியாற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு ஆடி,1ல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.