பதிவு செய்த நாள்
19
ஜூலை
2018
12:07
ஆர்.கே.பேட்டை: ஆண்டிற்கு, இரண்டு முறை குலதெய்வ வழிபாடு நடத்தும் வழக்கம் கொண்ட பக்தர்கள், தை மாதத்திற்கு அடுத்து, தற்போது ஆடியில் இரண்டாம் கட்டமாக பூஜை நடத்த துவங்கி உள்ளனர். ஆடி வெள்ளிக்கிழமையான நாளை, ஏராளமான பக்தர்கள், குலதெய்வ அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து, பூஜை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜை நடத்தும் பக்தர்கள், தை மாதத்திற்கு அடுத்தபடியாக, இந்த ஆடியில் இரண்டாம் கட்டமாக பூஜைகளை நடத்தி வருகின்றனர். அம்மனுக்கு உகந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். ஆடி 1ம் தேதியே செவ்வாய் கிழமையில் அமைந்ததால், நேற்று முன்தினம் முதலே, அம்மன் கோவில்களில் பக்தர்களின் சிறப்பு வழிபாடு கோலாகலமாக துவங்கி விட்டது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார், வெள்ளாத்துாரம்மன், சேரி அய்யம்பேட்டை அன்னியம்மன், பெருமாநல்லுார் ஓசூரம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடி பொங்கல் உற்சவம் களை கட்டி வருகிறது.நாளை, ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால், அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாட்டிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழிகளை பலியிட்டு வருவதால், ஆடு, கோழிகளின் விலை உயர்ந்துள்ளது. ஆடுகளின் விலை ஒரு கிலோ, 400 ரூபாய் என்ற வழக்கமான விலையில் இருந்து, 450 - 500 ரூபாய் வரை விலை வைத்து பேரம் பேசப்பட்டு வருகிறது.நாட்டுக்கோழி கிலோ, 300 - 350 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை, 270 - 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.