பதிவு செய்த நாள்
22
ஜூலை
2018
11:07
கோபி: பச்சமலை முருகன் கோவிலில், படி மண்டபம் கட்டும் பணி, தீவிரமாக நடக்கிறது. கோபி அருகே, பிரசித்தி பெற்ற பச்சமலை முருகன் கோவில் உள்ளது. மலைக்கோவிலை அடைய, மலைப்பாதை வழி உள்ளது.
இதேபோல், 165 படிக்கட்டுகள் வழியாக, மலையை அடையும் வழியில், மூன்று படி மண்டபங்கள் உள்ளன. படிக்கட்டு வழியாக மலையேறும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக, கூடுதல் படிமண்டம் கட்ட, கோரிக்கை எழுந்தது. அதன்படி, உபயதாரர் நிதியாக, தலா 6.10 லட்சத்தில், பல மாதங்களுக்கு முன், மூன்று படிமண்டபங்கள் கட்டப்பட்டது. இதனால் படிமண்டபத்தின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. பின் மலைக்கோவிலில் இருந்து, படிக்கட்டு வழியாக இறங்கும் வழியில், முதல் படிமண்டபம் கட்ட முடிவானது. அதன்படி, உபயதாரர் நிதியாக 6.90 லட்சத்தில், கட்டுமான பணி துவங்கியுள்ளது. இதற்காக தூண்கள் நிறுவ, பாறையை குடைந்து உடைக்கும் பணி நடக்கிறது. இரு மாதத்தில் பணி முடிக்க வாய்ப்புள்ளது என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.