பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
03:07
திருச்சி: இந்து கோவில்களில், அகல் விளக்கு ஏற்றத் தடை விதித்திருப்பதால், பரிகாரங்கள் செய்யவும், வேண்டுதல் நிறைவேற்றவும் முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36 ஆயிரம் கோவில்களில், பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய கோவில்களில் உள்ள சுவாமி சன்னதிகளில், பக்தர்கள், நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, காலம் காலமாக தொடர்ந்து நடக்கிறது. இந்துக்களின் பல பண்டிகைகளும் தீபத்தை அடிப்படையாக வைத்தே கொண்டாடப்படுகின்றன. இந்துக்களின் வழிபாட்டு முறைகளிலும், நெய் தீபம் ஏற்றுவது முதன்மையானதாக உள்ளது.
சுவாமியிடம், பக்தர்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறவும், வாழ்க்கையில் துன்பங்கள் தீரவும், இடர்பாடுகள் நீங்கவும், கோவிலில் நெய் தீபம் ஏற்றுகின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கோவில் சன்னதிகளில், பக்தர்கள் தீபம் ஏற்ற தடை விதித்து, உத்தரவிட்டிருப்பது, பக்தர்களின் வேண்டுதலுக்கு தடை விதிப்பதாகவே கருதப்படுகிறது. திருச்சியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், உறையூர் வெக்காளியம்மன், உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்– அகிலாண்டேஸ்வரி கோவில்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆணையர் ஜெயாவின் உத்தரவால், திருச்சியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பக்தர்கள் நெய் தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த தட்டுக்கள், ஸ்டாண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சன்னதி முன், அகண்ட தீபம் ஏற்றி வைத்துள்ளனர்.
‘கோவில் மற்றும் கோவிலில் உள்ள பழமையான புராதன சின்னங்களின் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பக்தர்கள் அகல் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது’, என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தனித் தனியாக அகல் விளக்கு ஏற்றுவதை தவிர்த்து, சுவாமி சன்னதி முன், அகண்ட தீபம் வைத்து, பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை, அதில், ஊற்றி விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள், தோஷ நிவர்த்திக்காக கூறும் பரிகாரங்களை, கோவில்களில் நிறைவேற்றும் பக்தர்கள், அவரவர் கைகளால் தனித்தனியே அகல் விளக்கு ஏற்ற வேண்டும், என்று விரும்புகின்றனர். உரிய பாதுகாப்பு வழி முறைகளை செய்யாமல், கோவில்களில் பரிகாரங்கள் செய்யவும், வேண்டுதல் நிறைவேற்றவும் வரும் பக்தர்கள், அகல் விளக்கு ஏற்றத் தடை விதிப்பது, வேதனை அளிக்கிறது, என்று தெரிவிக்கின்றனர்.
இது தவிர, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த மாநில இளைஞரணி அமைப்பாளர் ரெங்கராஜன் தலைமையில் வந்த, இந்து மக்கள் இயக்கத்தின் சக்தி சேனா அமைப்பினர், கோவில்களில் விளக்கு ஏற்ற விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும், என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது: மகா சிவராத்திரி, ஆடி, தை மாதங்களில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் லட்ச தீபம், ஆயிரத்து எட்டு தீபம் ஏற்றி வழிபடுவது இந்து கலாச்சாரம். வேண்டுதல்கள் நிறைவேற்றவும், பரிகாரங்கள் செய்யவும் கோவில்களில் விளக்கேற்றுவதை தடுப்பது தெய்வக் குற்றம், என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
இந்து மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் விதிக்கப்பட்ட விளக்கேற்றுவதற்கான தடையை விலக்கி, விளக்கேற்றி வழிபபடுவதை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.