பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
12:07
வேலுார்: வேலுார் அருகே, 500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வேலுார் அடுத்த, மூஞ்சூர்பட்டு கிராமத்தில், பிள்ளையார் கோவில் கட்ட, அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் மாலை, 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினர். அப்போது, பூமிக்கடியில் சிலைகள் இருப்பது தெரியவந்ததால், பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. வேலுார் தாசில்தார் பாலாஜி, வேலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் ஆகியோர், சிலைகளை ஆய்வு செய்தனர்.அதில், 500 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், பலிபீடம், சிவலிங்கம் கற்சிலைகள் என்பதும், இங்கு, நிறைய சிலைகள் இருக்க வாய்ப்புள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை, ஆழமாக மக்கள் தோண்டி வருகின்றனர்.