பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
12:07
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுதல் விழா கோலாகலமாக நடந்தது. அப்போது, மழை பெய்ததால், பக்தர்கள் பரவசமடைந்தனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்திருவிழாவில், பூச்சாட்டுதல் முக்கியமானது. அப்போது, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, அம்மன் மக்களை குளிர்ச்சியடைய வைப்பதாக நம்புகின்றனர். அதன்படி, நடப்பாண்டு விழா, நேற்று மாலை, 7:00 மணிக்கு தொடங்கியது. பூஜையின்போது, சேலத்தில், ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. இதனால், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பரவசமடைந்து, இருகரங்களை தூக்கி, அம்மனை வழிபட்டனர். பின், கிச்சிப்பாளையத்தில் வசிக்கும் கட்டளைதாரர்கள், 300க்கும் மேற்பட்ட கூடைகளில், பூக்களை எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அந்த பூக்களால், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக, சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டிருந்தது. விழா நிறைவில், பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆக., 6 இரவு, 8:00 மணிக்கு சக்தி கரகம் அழைப்பு, 8ல், பொங்கல் வைத்தல், மா விளக்கு வழிபாடு; 14ல் பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபி ?ஷகம், அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கவுள்ளது.