பதிவு செய்த நாள்
09
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம புறங்களில் நடக்கவிருந்த திருவிழாக்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி இறப்பை அடுத்து, தள்ளி வைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி கிருத்திகை அடுத்துள்ள, செவ்வாய், புதன் கிழமைகளில் மாரியம்மனுக்கு விழா எடுத்து ஆடு வெட்டுவது வழக்கம். இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி கிருத்திகை முடிந்து, நேற்று மாரியம்மனுக்கு, மாவிளக்கு எடுத்து, ஆடு வெட்டு விழா நடப்பதாக, பல கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கருணாநிதி இறந்ததையடுத்து, கிராமபுறங்களில் நடக்கவிருந்த கோவில் திருவிழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டன. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட திருவிழா, ஞாயிற்றுக்கிழமை நடக்கும், என மக்கள் தெரிவித்தனர்.