பதிவு செய்த நாள்
09
ஆக
2018
05:08
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே சின்னக்கோசணத்தில், பூதநாச்சியம்மன் நாட்ராயசுவாமி கோவிலில், ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 2,000 கிடாய்கள் வெட்டி, மெகா விருந்து நடந்தது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூர் தாலுகா, சின்னக்கோசணத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூதநாச்சியம்மன் நாட்ராயசுவாமி கோவில் உள்ளது. ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை, 3ல் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று இரவு, படைக்கலம் பூஜை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணி முதல், விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்து, பொது கிடாய்கள் சுவாமிக்கு வெட்டப்பட்டது.
கோவிலுக்கு வேண்டியிருந்தவர்கள் மொத்தம், 2,000 கிடாய்களை நேர்த்திக்கடனாக வெட்டினர். காட்டு கோவிலில் கிடாய்கள் வெட்டி, வீட்டு கோவிலில் கறிகள் வெட்டப்பட்டன. அரை ஏக்கர் பரப்பளவில் கீற்று ஓலையில் பந்தல் அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட உருளி அண்டாக்களில், கறி விருந்து செய்யப்பட்டது. ஒன்பது டன் அரிசி, மூன்று டன் சிறிய வெங்காயம், 500 கிலோ வரமிளகாய், 50 கிலோ மிளகு, மூன்று மூட்டை மல்லி , 10 டின் எண்ணெய், 10 டன் விறகு கொண்டு கறி சமைக்கப்பட்டது. சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டப்பட்ட, அனைத்து கிடாய்களும் கறியாக சமைத்து, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.