பதிவு செய்த நாள்
10
ஆக
2018
10:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆக.,21 சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. யாக பூஜைகள், காப்பு கட்டிய சந்திரசேகர பட்டர் தலைமையில் துவங்கின. சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரம் முன் அம்பாள், சுந்தரேஸ்வரர் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள ஒலிக்க காலை 10:55 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஓதுவார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது.
ஆக.,21ல் பட்டாபிஷேகம்: ஆக.,15 உற்சவ முதல் நாளில் கருங்குருவிக்கு உபதேசம், 16ல் நாரைக்கு மோட்சம் அருளல், 17 ல் மாணிக்கம் விற்றல், 18ல் தருமிக்கு பொற்கிழி அருளல், 19ல் உலவாக்கோட்டை, 20ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு திருவிளையாடல் நடக்கிறது. ஆக.,21 காலை வளையல் விற்ற லீலை, இரவு 7:30 மணிக்கு மேல் 7:54 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
ஆக.,22 நரியை பரியாக்குதல், குதிரை கயிறு மாறுதல், ஆக.,23 மதியம் 1:௦5 மணிக்கு மேல் 1:29 மணிக்குள் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்(அன்று கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்), 24ல் விறகு விற்றல், 25ல் சட்டத்தேர், 26 தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.