பதிவு செய்த நாள்
11
ஆக
2018
02:08
சென்னை, ஆடி மாதத்தின், கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அம்மன் வழிபாட்டு மாதமாக, ஆடி கருத்தப்படுகிறது. அந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, அதிகாலை முதல் பக்தர்கள், அம்மன் கோவில்களில் குவிந்தனர். புற்றுக்கு பால் வார்த்தல், பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. பல கோவில்களில், பக்தர்கள் பால் குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், முளைப்பாரி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மாலை, தீ மிதி திருவிழா நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருமுல்லைவாயில் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், மயிலாப்பூர் கோலவிழியம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.