பதிவு செய்த நாள்
12
ஆக
2018
11:08
வத்திராயிருப்பு: பூலோக கயிலை என அழைக்கப்படும் மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவிற்காக கடந்த 7ம் தேதி முதல் மலைப்பாதை திறந்து பக்தர்கள் சென்றனர். மலையிலும், மலை அடிவாரம் சுற்றிய தோப்புகள், வயல்களிலும் கூடாரம் அமைத்து தங்கினர். மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில் ஆக.9ல் பிரதோஷ வழிபாட்டுடன் அமாவாசை விழா துவங்கியது. ஆக.10ல் சிவராத்திரி வழிபாடு நடந்தது. அமாவாசையான நேற்று சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரம், சந்தன மகாலிங்கசுவாமி ராஜ அலங்காரம், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்ப அலங்காம் செய்யப்பட்டு் சிறப்பு பூஜைகள் நடந்நது.பக்தர்கள் மலை அடிவாரத்தில் ஆடு, கோழிகள் பலியிட்டு அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதுரை கலெக்டர் வீரராகவராவ் மலையிலும், எஸ்.பி.,க்கள் மணிவண்ணன் (மதுரை) ராஜராஜன் (விருதுநகர்) அடிவாரத்திலும் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 2500 போலீசார், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தாணிப்பாறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சதுரகிரியில்மதுரை பக்தர் பலி : சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. திருவிழா துவங்கிய முதல்நாளில் மேலுாரை சேர்ந்த பக்தர் மூச்சுத் திணறலால் இறந்தார். நேற்று மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அன்பரசன் 29, தனது நண்பர்கள் சிலருடன் சாப்டூர் வாழைத்தோப்பு பகுதி வழியாக சென்றார். தரிசனம் முடிந்து மலையிலிருந்து இறங்கும்போது காத்தாடிமேடு என்ற பகுதியில் வந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நண்பர்கள் முதலுதவி செய்து அடிவாரத்திற்கு துாக்கி வரும் வழியில் இறந்தார்.
தண்ணீருக்காக அலைந்த பக்தர்கள் : மலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடியது. பக்தர்கள் குடிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் திண்டாடினர். மொட்டை போட்ட பக்தர்கள் குளிப்பதற்கு தண்ணீர் இன்றி, கடையில் விற்பனைசெய்யப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி குளிக்கும் நிலைக்கு ஆளாயினர். தண்ணீர் பிரச்னையால் கழிப்பறைகள் செயல்படாமல் முடங்கியதால் மலைப்பாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியது.