பதிவு செய்த நாள்
12
ஆக
2018
11:08
தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோவில் கோபுரங்களில் படிந்துள்ள கரைகளை நீக்கி, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரங்கள், துாசி படிந்து நிறம் மாறிப்போனது. 2010ம் ஆண்டு நடைபெற்ற, ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது, கோபுரங்கள், சுவர்கள், அறிவியல் முறைப்படிதுாய்மைப்படுத்தப்பட்டன. நிதி ஒதுக்கீடு இல்லாததால், சில ஆண்டுகளாக, மீண்டும் கோபுரங்கள் நிறம் மாறி காட்சியளித்தன. தற்போது, கோவில் கும்பாபிஷேகத்துக்காக, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரங்களில், அறிவியல் முறையிலான துாய்மைப்படுத்தும் பணி, சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் கோபுரங்கள் பாசி படிந்து, கருப்பு நிறமாக மாறி விடுகிறது. அவற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, தேங்காய் நார் துாரிகை மூலம், சுத்தம் செய்யப்படும். பின்னர், அமோனியாவை தண்ணீரில் கலந்து, துாய்மைப்படுத்தப்படும்.பூஞ்சாணம், காளான்கள் வளராமல் இருக்க, பூச்சு செய்யப்படவுள்ளது. மழை நீரால் கற்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ஹைட்ரோபோபிக் என்ற சிலிக்கான் கலவை பூச்சு செய்யப்படும்.
கற்கள் சிதையாத அளவுக்கு, வேதித்தன்மை குறைவாக இருக்கும் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.கோவிலில் உள்ள மராட்டியர் கோபுரம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், கருவறை கோபுரம், அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களும் சுத்தம் செய்யப்படவுள்ளன. நுணுக்கமான பணிகள் முடிந்த பிறகு, கோவில் மிகவும் அழகுடன் மிளிரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.