பதிவு செய்த நாள்
12
ஆக
2018
12:08
நாகர்கோவில்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை, 3:30 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, தர்ப்பணம் கொடுத்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும், கேரளா, மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர்.இதையொட்டி, நேற்று கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும், வாகன நெரிசலுமாக காணப்பட்டது. தர்ப்பணம் செய்த பக்தர்கள், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியதால், கோவிலிலும் கடும் கூட்டம் நிலவியது.
மூன்று மணி நேரத்திற்கு மேல், வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் பகவதியம்மனை வழிபட்டு சென்றனர்.ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் மட்டுமே திறக்கப்படும் பகவதியம்மன் கோவில் கிழக்கு வாசல், நேற்று திறக்கப்பட்டது. அதன் வழியாக பகவதியம்மன் கோவிலுக்குள் பிரவேசித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஆற்றில் நீராடி, அங்குள்ள வாவுபலி மைதானத்தில் தர்ப்பணம் கொடுத்தனர்.கேரள மாநிலத்தில் கனமழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு தர்ப்பணம் கொடுக்கும் ஆலுவா சிவன் கோவில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
இதனால், வழக்கத்தைவிட அதிக அளவில், கேரள பக்தர்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வந்து தர்ப்பணம் கொடுத்தனர். குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.உள்வாங்கிய கடல்பக்தர்கள் சிரமம்கன்னியாகுமரி கடலை பொறுத்தவரை, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல் உள் வாங்கும் நிகழ்வு வழக்கமாக நடக்கும். இந்நேரத்தில், கன்னியாகுமரி படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதுண்டு. ஆடி அமாவாசையான நேற்றும், முக்கடல் சங்கமத்தில் கடல் உள் வாங்கியது. வழக்கத்தைவிட, 10 மீட்டருக்கு மேல் கடல் உள்பகுதிக்கு சென்ற நிலையில், கடலுக்குள் இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால், பக்தர்கள் நீராட சிரமப்பட்டனர்.