பதிவு செய்த நாள்
12
ஆக
2018
12:08
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் அமைத்து வழிபடுவோர், 24 வழிகாட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, அரசுஉத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, செப்டம்பர், 13ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முக்கிய வீதிகளில், பிரமாண்டமான விநாயகர் சிலைகளை அமைத்து, வழிபடுவது வழக்கம்.இந்த ஆண்டு சிலை அமைப்பாளர்கள், 24 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, அரசு சார்பில், அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம்: விநாயகர் சிலைகள் அமைக்க அரசு 24 நிபந்தனைகள் விநாயகர் சிலை அமைப்போர், முறைப்படி போலீஸ் உதவி கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும். போலீஸ் கமிஷனர் இல்லாத பகுதிகளில், ஆர்.டி.ஓ., அல்லது உதவி கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்
* சிலை அமைக்கும் இடம், பொதுச் சொத்தாக இருந்தால், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றிடம் இருந்தும், தனி நபர் இடமாக இருந்தால், அதன் உரிமையாளரிடமும், ஒரு மாதத்திற்கு முன்பே, தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்
* சிலை அமைக்கும் இடத்திற்கு, எங்கிருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது என்பதற்கு, மின் வாரியத்திடம் கடிதம் பெற வேண்டும்;தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்
* விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு ஏற்படுத்தும், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், ரசாயன வர்ணம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்
* சிலை அமைப்பாளர்கள், விநாயகர் சிலை அமைக்கப்படும் இடத்தில், உள்ளே நுழையும் வழி, வெளியேறும் வழி ஏற்படுத்த வேண்டும். தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது
* சிலை அமைக்கப்படும் இடத்தில், முதலுதவி பொருட்கள் வைக்க வேண்டும்
* விநாயகர் சிலைகள், அடிப்பாகத்துடன் சேர்த்து, 10 அடிஉயரத்திற்குள் இருக்க வேண்டும்; அதை, தாண்டக்கூடாது
* பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே, விநாயகர் சிலைகள் அமைக்கக்கூடாது
* சிலைக்கு வழிபாடு நடக்கும் நேரங்களில் மட்டும், மைக் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது. பாக்ஸ் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல், சத்தம் இருக்கக்கூடாது
* விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில், சட்ட விரோத செயல் எதுவும் நடைபெறாது என்பதை, அமைப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும்
* சிலை நிறுவப்படும் பகுதியில், அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் பதாகைகள் வைக்கக் கூடாது
* சிலை பாதுகாப்பு பணியில், 24 மணி நேரமும், தலா இருவர் இருக்க வேண்டும்; ஜெனரேட்டர் வைத்திருக்க வேண்டும்
* வருவாய் துறையினர், போலீசார், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறும் விதிமுறைகளை, சிலை அமைப்பாளர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்
* சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு முடிந்து, ஐந்து நாட்களுக்குள், அதை கரைத்துவிட வேண்டும்
* விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல, நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர், மினி லாரி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது
* விநாயகர் ஊர்வலம் போலீசார் கூறும் வழிகளில் தான் நடக்க வேண்டும்; விநாயகர் ஊர்வலத்தில், பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது
* விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட, 48 மணி நேரத்திற்குள், நீர் நிலைகளில் ஒதுங்கும் பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.