பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
கொடுமுடி: கொடுமுடி வட்டாரத்திற்குட்பட்ட ஏமகண்டனூர் மகா மாரியம்மன், சிவகிரி எல்லை மாகாளிஅம்மன், சின்னாக்கண்டனூர் சக்தி மாரியம்மன், கொடுமுடி பகவதி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை தினமான, நேற்று காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
* கொடுமுடி, மகுடேசுவரர் கோவிலில் மகுடேசுவரர், வடிவுடைநாயகி அம்பாள், வீரநாராயணப் பெருமாள், மகாலட்சுமி தாயார், பிரம்மா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், மத்திய மாநில அரசுகளின் உத்தரவின்படி, படித்துறைகளில் மட்டுமே அமர்ந்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் திதி கொடுத்தும், ஆற்றில் பிண்டம் கரைத்தும் வழிபாடு நடத்தினர்.
* சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை, 4:30 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. காலையில் நடந்த கோ - பூஜையை காண பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். காலை, 6:40 மணிக்கு முருகனுக்கு அபி?ஷகம் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதிபராசக்தியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
* பவானிசாகர், டணாய்க்கன் கோட்டை கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதேபோல், தொட்டம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அண்ணாநகர், கதிர் பெருமாள் கோவிலில் பெருமாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில், மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில், சவுடேஸ்வரியம்மன் கோவில், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில், தவுட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில், பிரம்ம தேசம் ஓங்காளியம்மன் கோவில், அத்தாணி, கைகாட்டி ஆஞ்சநேயர் கோவில், கீழ்வாணி நஞ்சுண்டேஸ்வரர் கோவில், ஆப்பக்கூடல் கணேச பாலதண்டாயுதபாணி மலைக்கோவில், பிரகதீஸ்வரர் கோவில் உட்பட்ட பல்வேறு கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சிவன்மலை, சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதல் பூஜையான கோமாதா பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. மதியம் உச்சிகால பூஜை, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மலையை சுற்றி வந்து அருள் பாலித்தார். மாலையில், சிவன்மலை முருகரான சிவாச்சலபதியும், வள்ளி, தெய்வாளையும் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* சத்தியமங்கலம், அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நேற்று, காலை முதல் பக்தர்கள் வரதொடங்கினர். சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.