பதிவு செய்த நாள்
13
ஆக
2018
11:08
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 47ம் ஆண்டு, ஆடிப்பூர விழா நடந்தது. சுயம்பு அம்மனுக்கு, பங்காரு அடிகளார், பாலாபிஷேகம் செய்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. ஆடி அமாவாசை சிறப்பு வேள்வி பூஜை, நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு, 47வது ஆடிப்பூர விழா, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசை முழங்க, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், பங்காரு அடிகளார், வீட்டிலிருந்து தாய் வீட்டு கஞ்சியை, கோவிலுக்கு எடுத்து வந்து, கருவறை அம்மனுக்கு படைத்தார். அதன் பின், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி வளாகத்திலிருந்து, 3 கி.மீ., துாரம் கஞ்சி கலயங்கள் சுமந்து வந்த பக்தர்களை, காலை, 6:00 மணிக்கு, கோவிலுக்குள் அனுமதித்தனர்.
கஞ்சி வார்த்தல் விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கினர். காலை, 11:30 மணிக்கு, சுயம்பு அம்மனுக்கு, பங்காரு அடிகளார் பாலாபிஷேகம் செய்தார். இன்றும், பாலாபிஷேகம் நடக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு வழக்கறிஞர் ராகவன், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சித்தர் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.