பெங்களூரு: ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள கிசிஜோகி என்ற சிறு நகரத்தில் இந்து கடவுள் லட்சுமிக்கு கோவில் உள்ளதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள தயானந்த் சாகர் கல்லூரியில் நடந்த விழாவில் ஜப்பான் தூதர் தகாயுகி கிதாகவா பேசியதாவது: டோக்கியோ நகருக்கு அருகே உள்ள சிறு நகரத்தின் பெயர் கிசிஜோகி. அங்குள்ள லட்சுமி கோவிலை அடிப்படையாக கொண்டு அந்த நகருக்கு அப்பெயர் கிடைத்துள்ளது. கிசிஜோகி என்றால் ஜப்பான் மொழியில் லட்சுமி கோவில் என்று அர்த்தம். இந்தியாவும், ஜப்பானும் வேறு வேறு என பலரும் நினைப்பது உண்டு. ஆனால், உண்மையில் அப்படி இல்லை. ஜப்பான் நாட்டில் இந்து கடவுள்களுக்கு பல கோவில்கள் உள்ளன.
சமஸ்கிருதம், தமிழுடன் தொடர்பு: பல காலமாக நாங்கள் இந்து கடவுள்களை தான் வழிப்பட்டு வருகிறோம். இதே போல் ஜப்பான் மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் பல ஒற்றுமை உண்டு. ஜப்பான் மொழியில் சுஷி என்றால் அரிசி மற்றும் வினிகரில் செய்யப்பட்ட உணவு என்று அர்த்தம். சுஷி என்பதை ஷாரி என்றும் அழைப்பர். சமஸ்கிருத மொழியில் அரிசி என்ற வார்த்தையை கூறும்,ஸாலி என்ற பெயரில் இருந்து ஷாரி வந்தது. ஜப்பான் மொழியில் 500 வார்த்தைகளின் மூலத்தை சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் காணலாம். இந்திய கலாச்சாரம் மட்டுமல்ல, இந்திய மொழிகளும் எங்கள் மொழி மற்றும் வழிப்பாட்டில் ஆதிக்கம் கொண்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.