பதிவு செய்த நாள்
14
ஆக
2018
10:08
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள ஐந்து சிவாலயங்களில் அருள்பாலித்து வரும் ஆடிப்பூர அம்மன்கள், மகாமக குளத்தில் எழுந்தருளினர். ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தில், சிவாலயங்களில் உள்ள அம்மனுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடிப்பூரம் தினமாக நேற்று, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோவில்களிலிருந்து, ஆடிப்பூர அம்மன்கள், சிறப்பு அலங்காரத்துடன், புறப்பட்டனர்.
கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளினர். ஆடிப்பூர அம்மன்களுக்கு, ஏராளமான பெண்கள், வளையல்கள் அணிவித்து, பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, ஐந்து ஆடிப்பூர அம்மன்களும், கும்பகோணம் மகாமக குளத்தின் மேற்கு கரையில் எழுந்தருளினர்.அப்போது, ஐந்து கோவில்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஸ்திரத்தேவருக்கு, பால், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தர்களும் குளத்தில் புனித நீராடினர். தீபாராதனைக்கு பின், ஆடிப்பூர அம்மன்கள் கோவில்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.அதே போல், திருவிடைமருதுாரை அடுத்த கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி, துகிலி காவிரி ஆற்றில், ஆடிப்பூர அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார்.