சின்னமனுார், தேனி மாவட்டம் குச்சனுார் சோணைக்கருப்பண சுவாமி பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயிரம் மதுபாட்டில்கள் படையலிடப்பட்டன. பக்தர்கள் வழங்கிய 52 ஆடுகள் வெட்டி கறி விருந்து வைக்கப்பட்டது. குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள சோணை கருப்பண சுவாமி பொங்கல் விழா நேற்று நடந்தது. இரவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆயிரம் மது பாட்டில்கள் சுவாமி முன் படையலிடப்பட்டன. பக்தர்கள் வழங்கிய 52 ஆடுகளை வெட்டி ஊர் மக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.
அர்ச்சகர் ரகுராம் கூறுகையில், பிரச்னைகள் தீர்வதற்காக சோணை கருப்பண சுவாமிக்கு மது படையல் வைப்பதாக வேண்டி கொள்வது வழக்கம். பிரார்த்தனை நிறை வேறிய பக்தர்கள் வழங்கிய மது சுவாமியின் காலடியில் உள்ள பச்சை மண் கலயத்தில் ஊற்றப்பட்டது. நுாற்றுக்கணக்கான பாட்டில்களை சிறிய அறைக்குள் வைத்து திறந்து ஊற்றிய போதும், ஒரு துளி மது வாடை வராது. அவ்வாறு ஊற்றப்பட்ட மது முழுவதும் தீர்ந்த பின் கண்கள் சிவந்து நிற்கும் சோணை கருப்பனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதில் பங்கேற்போரின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளதால் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,என்றார்.
குளறுபடி: அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் பக்தர்கள் வழங்கிய உயர்ரக மது பாட்டில்கள் அறநிலையத்துறை பணியாளர்களின் உதவியுடன் சிலர் எடுத்து சென்றனர். மது பாட்டில் வழங்குபவர்களின் பெயர், அளவு குறித்து பதிவு செய்ய வேண்டும். சரியான எண்ணிக்கை வரக்கூடது என்பதற்காக பதிவு செய்பவர்களுக்கு வரிசை எண் கொடுப்பதில்லை என புகார் எழுந்தது.