பதிவு செய்த நாள்
14
ஆக
2018
12:08
சென்னை: ஆடிப்பூரத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. அம்மனுக்கு உகந்த நாட்களில், ஆடிப்பூரத் திருநாள் மிகவும் சிறப்பானது. இந்நாளில், சித்தர்களும், யோகிகளும் தங்களது தவத்தை துவக்குவதாக, புராணங்கள் கூறுகின்றன. ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். அன்று, பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, அம்மனுக்கு, வளைகாப்பு நடத்தப்படுகிறது. அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு, அந்த வளையல்கள், பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அந்நாளில், திருமணமான பெண்கள், மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள, தீர்க்க சுமங்கலியாய் இருப்பர் என்பதும் ஐதீகம்.
மயிலாப்பூர் கோலவிழியம்மன், முண்டகக்கண்ணியம்மன்; பிராட்வே கற்பகாம்பாள்; கோடம்பாக்கம், தேவி கருமாரியம்மன், பிரத்தியங்கரா தேவி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் உள்ளிட்ட கோவில்களில், வளைகாப்பு வைபவம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில், ஆடிப்பூரத்தை ஒட்டி, நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.