பதிவு செய்த நாள்
14
ஆக
2018
12:08
ஆர்.கே.பேட்டை: ஆடி திருவிழாவை ஒட்டி, வெள்ளாத்துார் அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து அபிஷேகம் செய்தனர். உற்சவர் அம்மன், தனலட்சுமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில் அமைந்துள்ளது, வெள்ளாத்துாரம்மன் கோவில். வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள், ஆடி மற்றும் தை மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடத்தி வருகின்றனர். நேற்று, ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து, திரளான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். பகல், 12;00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. கருவறையில் இருந்து வெளியேறிய அபிஷேகப் பாலை, பக்தர்கள் பிரசாதமாக பெற்றுக் கொண்டனர்.
அர்த்த மண்டபத்தில், உற்சவர் அம்மன், தனலட்சுமியாக அருள்பாலித்தார். அம்மன் கையில் இருக்கும் பொற்குடத்தில் இருந்து நாணயங்கள் கொட்டும்படியான அலங்காரம், பக்தர்களை பரவசப்படுத்தியது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் உள்புறப்பாடு எழுந்தருளினார். ஆடி திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று, அம்மனைத் தரிசனம் செய்ய, குடும்பத்துடன் வந்திருந்தனர்.