பதிவு செய்த நாள்
14
ஆக
2018
12:08
சென்னை: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஆராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்பாளின் அருளைப் பெற்றனர்.சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி அம்பாள் - ரத்னகிரீஸ்வரர் கோவில்.
அங்கு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், ஆஷாட மகோற்சவம், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடத்தப்பட்டது.இதில், அர்த்தநாரீஸ்வர மகா மந்திர ஜபம், சிவ ஆயுத நாமாவளி அர்ச்சனை ஆகியவை நடத்தப்பட்டன.ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, அராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு வைபவம், நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள், கோவிலில் குவிந்தனர். காலை, 7:00 மணிக்கு, ஆராளகேசி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் வழங்கிய வளையல்களால், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின், வளைகாப்பு வைபவம், சீர்வரிசை சமர்ப்பணம், மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்பாளின் அருளைப் பெற்றனர். அம்பாளுக்கு அலங்கரித்த வளையல்கள், பக்தர்களுக்கு இன்று பிரசாதமாக வழங்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.