பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆடிப்பூர விழாவில், அம்மனுக்கு பால்குடம், வளைகாப்பு உள்ளிட்டவை நேற்று கோலாகலமாக நடந்தன. காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள கனக துர்க்கை அம்மனுக்கு, 34ம் ஆண்டு, ஆடிப்பூர, 108 பால்குட அபிஷேக விழா, நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், பழமைவாய்ந்த பூதபூரீஸ்வரர் கோவிலில் உள்ள சவுந்தர வள்ளி அம்மனுக்கு, ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வளைக்காப்பு விழா நடந்தது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், 208 பக்தர்கள், பால் குடங்கள் சுமந்து, வீதியுலா சென்றனர். கோவிலை வலம் வந்து, உற்சவர்களுக்கு பாலாபிஷேகம் நடத்தினர்.
திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், ஆடிப்பூர பால்குட விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, திரிபுர சுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருத்தணி, அக்கைய்யாநாயுடு சாலையில் தணிகாசலம்மன் கோவிலில், அம்மனுக்கு புதுவளையல் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் நடத்தியும் வழிபட்டனர்.