பதிவு செய்த நாள்
17
ஆக
2018
12:08
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேக தரிசன கட்டணம் எந்தவித முன் அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும், ஒன்பது கால பூஜைகள் நடக்கிறது. இதில் காலை, 6:15 மணி, பகல், 10:30 மணி, இரவு, 7:00 மணி ஆகிய நேரங்களில் நடக்கும் அபிஷேகங்கள் முக்கியமானது. இந்த அபிஷேக நேரங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, இது வரை அபிஷேக தரிசன கட்டணமாக, 200 ரூபாயும், வி.ஐ.பி., தரிசன கட்டணமாக, 1000 ரூபாயும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென அபிஷேக தரிசன கட்டணம், 200 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாகவும், வி.ஐ.பி., தரிசன கட்டணம், 1,000 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல் மாதந்தோறும் நடக்கும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மாதாந்திர வெள்ளி கிழமை ஆகிய நாட்களில் அபிஷேக தரிசன கட்டணங்கள், 2,000 ரூபாயும், வி.ஐ.பி. அபிஷேக தரிசனம் கட்டணம், 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து, எவ்வித முன் அறிவிப்பும் வெளியிடப்படாமல், திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகைகள் கூட வைக்கப்படாமல், கட்டணம் செலுத்தச் செல்லும் போது, பக்தர்களிடம் சொல்லப்படுகிறது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.