பதிவு செய்த நாள்
17
ஆக
2018
12:08
கோவை: தனது மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை காண, ஒவ்வொரு ஆண்டும் மகாபலி மன்னன் வருவதாக ஐதீகம். அந்த தினமே கேரளாவில் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தாண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதற்கு பதிலாக, மழை வெள்ளத்தில் தவிக்கின்றனர். அதனால், கேரளாவை பின்பற்றி, கோவையில் வசிக்கும் மலையாள மக்களும், ஓணம் கொண்டாட்டத்தை இந்தாண்டு ரத்து செய்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கேரளாவில் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வசிப்பிடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அம்மாநிலத்தில், இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். வீடு, உணவு, உடை, இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மோசமான சூழலுக்கு, கேரளா தள்ளப்பட்டிருப்பதால், அம்மாநில அரசு வரும், 25ம் தேதி கொண்டாடப்பட இருந்த ஓணம் பண்டிகையை ரத்து செய்துள்ளது. இதை பின்பற்றி, கோவை யில் உள்ள, 65 மலையாள அமைப்புகளை சார்ந்த, பல லட்சம் மலையாள மக்களும், பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளனர். நேற்று நடந்த கோயமுத்துார் மலையாளி சமாஜத்தின் செயற்குழுவில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன், ஓணம் பண்டிகை கொண்டாட ஆகும் செலவு தொகையை, கேரளாவுக்கு நிவாரண உதவியாக வழங்கவும், முடிவு செய்துள்ளனர். கோயமுத்துார் மலையாளி சமாஜம் சார்பில், 25 லட்சம், நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் 10 லட்சம், கோயமுத்துார் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 5 லட்சம், கேரளா கிளப் சார்பில் 5 லட்சம் ரூபாய் என, வாரி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோயமுத்துார் மலையாளி சமாஜ செயலாளர் விஜயகுமார் கூறுகையில், கேரளத்தில் பாதிப்புக்குள்ளானது எங்கள் சகோதரர்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம், எங்களுக்கு ஏற்பட்டதை போல் வருந்துகிறோம். அதனால் ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டோம். அதிகபட்சத் தொகையை நிவாரணமாக கொடுக்க இருக்கிறோம், என்றார்.