பதிவு செய்த நாள்
21
ஆக
2018
11:08
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள மன்னர் கால கோவில்கள், மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்த்தநாரீஸ்வரர் கோவில் விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் தேனபிஷேகம் மிகவும் சிறப்பு பெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முகூர்த்த தினங்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் இக்கோவிலில் தேர் திருவிழா, சனி பெயர்ச்சி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெறுவர். முக்கியமாக தமிழர்களின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டான யாழி சிலை (சிங்கத்தின் வாயில் உள்ள உருளை வடிவக்கல்லை வெளியில் எடுக்க முடியாது) இங்குள்ளது.
அரங்கநாத பெருமாள் கோவில்: திருக்கோவிலுார் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் கிருத யுகத்தில் கட்டப்பட்ட அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட பெரிய அளவிலான பெருமாள் சிலையும், கோவில் வளாகத்தில் உள்ள நெற்களஞ்சியமும் இக்கோவிலின் தனி சிறப்பாகும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்னரே இக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் ஆதிதிருவரங்கம் என அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு அருகே குளம் மற்றும் தென்பெண்ணை ஆறு ஆகியன அமைந்துள்ளது .ஆண்டுதோறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். கடந்த 6 மாதங்களுக்கு முன் மாவட்ட சுற்றுலா தல அலுவலர் மற்றும் அதிகாரிகள் திருவரங்கத்திலுள்ள கோவிலை ஆய்வு செய்து ரூம்கள், பைக் நிறுத்துவதற்கான ெஷட், பூங்கா ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுலா தலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என கூறிவிட்டு சென்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் பழங்கால தமிழர்களின் கட்டட கலையையும், மன்னர் கால வரலாற்றையும் நினைவு படுத்தும் வகையில் உள்ளன. தற்போது இந்த இரு கோவில்களும் முறையான பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.
மணிமுக்தா அணை: சூளாங்குறிச்சியில் 1969ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகளின் வழியாக வந்து இப்பகுதியில் ஒன்று சேர்வதால் மணிமுக்தா அணை என பெயர் பெற்றது.. இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராம ஏரிகள் நிரம்புவதுடன், 5493 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பயன்பெறுகின்றன. தற்போது இந்த அணையில் புதிய ெஷட்டர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அணையில் தண்ணீர் நிரம்பினால் சுற்று வட்டார பொதுமக்கள் பலர் அணைக்கு வந்து செல்வது வழக்கம். பூங்கா அமைக்க ஏதுவான வகையில் இந்த அணையை சுற்றி அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பிலான இடம் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே செஞ்சி கோட்டை, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில், கல்வராயன்மலை ஆகியன சுற்றுலா தல வரிசையில் இடம் பெற்றுள்ளது. அதே போல், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட இரண்டு கோவில்களையும், மணிமுக்தா அணையையும் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது, ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். மாவட்ட நிர்வாகம் முறையான ஆய்வு நடத்தி, சுற்றுலாத்தலமாக அறிவிப்பதற்குண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.