பதிவு செய்த நாள்
21
ஆக
2018
12:08
தர்மபுரி: விநாயகர் சிலைக்கு மனை தயாரிக்கும் பணியில், தொழிலாளர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர், 13ல் விநாயகர் சிலை கொண்டாடப்படுகிறது. இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், பழைய தர்மபுரி, தர்மபுரி, அதியமான்கோட்டை, ஒட்டப்பட்டி ஆகிய பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த, இரு மாதங்களாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வெளிமாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட முன்பதிவுகளுக்கான விநாயகர் சிலைகளை, வியாபாரிகளுக்கு இன்னும் சில தினங்களில் அனுப்ப உள்ளனர். இதற்காக விநாயகர் சிலைகள் வைக்க, மனை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன் மனை தனியாக வாங்கி வந்த சிலை உற்பத்தியாளர்களுக்கு அதிக செலவு ஏற்பட்டது. இதனால், தச்சு தொழிலாளர்களை, பணிக்கு அமர்த்தி, தாங்கள் தயாரிக்கும் சிலை அளவுகளுக்கு தகுந்த மனையை, சிலை தயாரிப்பாளர்களே தயாரித்து வருகின்றனர். அதியமான்கோட்டையில் உள்ள பல சிலை உற்பத்தியாளர்கள், ஒன்று சேர்ந்து, மனை தயாரிப்பு பணியாளர்களை நியமிப்பதன் மூலம், கூலியை பிரித்து கொடுத்து வருகின்றனர். இதன் மூலம், தங்களுக்கு மனை வாங்க ஏற்படும் வாகன செலவு, நேர விரயம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்று சிலை உற்பத்தியாளர்கள் கூறினர்.