பதிவு செய்த நாள்
23
ஆக
2018
10:08
திருப்பரங்குன்றம்: மதுரையில் நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்திலிருந்து நேற்று புறப்பாடானார்.
இக்கோயிலில் கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின் சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழிநெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாலித்து, மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நடந்தது. இரவு நரியை பரியாக்கும் லீலையில் முருகன், தெய்வானை பங்கேற்றனர். புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையிலும் பங்கேற்கிறார். ஆக. 25 ஆடிவீதி உலா முடிந்து, 16 கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம் சுவாமி, தெய்வானை விடைபெறுதல் நடக்கிறது. ஆக. 26 சுவாமி, தெய்வானை பூப் பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்நாட்களில் கோயில் நடை திறந்திருக்கும்.