சிவகங்கை: சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் உள்ள கீழக்கண்டனி, உச்சப்புளி, வெள்ளஞ்சி ஆகிய 3 கிராம மக்கள் சார்பில் வெள்ளஞ்சியில் உள்ள மஞ்சக்கொத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு மற்றும் அழகு நாச்சியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா கடந்த 1996 ல் நடைபெற்றது. அப்போது 3 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 22 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு 3 கிராம மக்களும் ஒன்றுகூடி, பிரச்னைகளை மறந்து மீண்டும் திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர்.
கடந்த ஆக., 17 ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு 3 கிராமமக்களும் ஒன்று கூடி கோயில் நிர்வாகிகளை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். இரண்டாம் நாள் திருவிழாவில் 3 கிராமமக்களும் பரவிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி பிற்பகல் 2:00 மணிக்கு மேலவெள்ளஞ்சி வழியாக மஞ்சகொத்து அய்யனார் கோயிலில் குதிரைகளை இறக்கி வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் பூஜாரி மாயழகு, 80,கூறுகையில், 22 வருடங்களுக்கு பிறகு 3 கிராம மக்களும் ஒற்றுமையாக இணைந்து திருவிழா நடத்தியதால் இந்தாண்டு நல்ல மழை பெய்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என்றார்.