பதிவு செய்த நாள்
29
ஆக
2018
10:08
தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், 100 ஆண்டுகள் பழமையான நெல்லி மரத்தை காக்கும் முயற்சியில், தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. தினமும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கோவிலின் உட்புற வளாகத்தில், 100 ஆண்டுகள் பழமையான வன்னி, நெல்லி, வேப்ப மரங்கள் உள்ளன. இதில், வன்னி மரத்தில் கிளைகள் வளர்ந்து, கீழே முறிந்து விழும் நிலையில் இருந்தது.
அதை தடுப்பதற்காக, தொல்லியல் துறை சார்பில், கிளை பகுதிக்கு, சிமென்ட் கட்டை அமைத்து, தாங்கி பிடிப்பது போல செய்தனர்.இதேபோல, வராஹி அம்மன் சன்னதி அருகே, நுாறாண்டுகளை கடந்த நெல்லி மரம் பட்டு போய், இரண்டாக பிளந்து காட்சி அளித்தது. காற்று அடித்தால், மரம் பொதுமக்கள் மீது விழும் நிலையில் இருந்தது. மரத்தில் உள்ள இலைகள் பசுமையாக இருப்பதால், மரத்துக்கு உயிர் உள்ளது என, முடிவு செய்த தொல்லியல் துறையினர், மரத்தை பாதுகாக்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக, மரத்தை சுற்றி வேலி அமைத்துள்ளனர். இதனால், காற்று அடிக்கும் போது மரம் விழுந்தாலும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.