ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுர கதவுக்கு வார்னிஷ் பூசும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் கோயிலில் வடக்கு, தெற்கில் கடந்த 400 ஆண்டுகளாக அடித்தளம் கட்டுமானத்துடன் மொட்டை கோபுரமாக இருந்தது. பின் 2015ல் சிருங்கேரி மடம், கோவை தொழிலதிபர் மூலம் ரூபாய் 15 கோடி செலவில் வடக்கு, தெற்கில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு, 2016ல் கும்பாபிஷேகம் நடந்தது. இரு ராஜகோபுரத்தில் உள்ள தேக்கு மரக்கதவுகள் வர்ணம் பூசாமல் பொலிவிழந்து கிடந்ததால், புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவுபடி நேற்று இரு கோபுர கதவுகளை சுத்தம் செய்து வார்னிஷ் பூசும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் கோபுர கதவுகள் பளபளப்புடன் காட்சியளித்தது.