பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
அன்னுார்: செட்டிபாளையத்தில் உள்ள, பல நுாறு ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, செட்டிபாளையத்தில், பல நுாறு ஆண்டுகள் பழமையான திருவேங்கட பெருமாள் கோவில் உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. காலையில் தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் திவ்ய பிரபந்த பாராயணம் நடத்தப்பட்டது. இன்று (29) காலை இரண்டாம் கால யாக பூஜை, மதியம் கோவிலுக்கு வெள்ளி கவசம் கொண்டு வருதல், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (30) அதிகாலை, நான்காம் கால யாக பூஜை, புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலை வலம் வருதல் நடக்கிறது. காலை, 10:30க்கு திருவேங்கட பெருமாளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. பின், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.