பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
குளித்தலை: குளித்தலை அருகே, மாரியம்மன் கோவில் உட்பட நான்கு கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் அருகே, பட்டவர்த்தி கிராமத்தில், மாரியம்மன், பட்டதளச்சியம்மன், மலையாள சுவாமி மற்றும் மல்லாண்டார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, பக்தர்கள் ராஜேந்திரம் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர். பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதணை நடந்தது. மாலை, யாக சாலையில் முதல் கால பூஜை, நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதையடுத்து, காலை, 11:45 மணியளவில், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ராஜேந்திரம், தண்ணீர்பள்ளி, பரளி, மருதூர், குளித்தலை, வீரம்பூர், மேட்டுமருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.