Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபெருமான் விலங்கு மற்றும் ... தெய்வத்துக்கு பாகற்காய் மாலை! தெய்வத்துக்கு பாகற்காய் மாலை!
முதல் பக்கம் » துளிகள்
தமிழில் வேங்கடேச சுப்ரபாதம்
எழுத்தின் அளவு:
தமிழில் வேங்கடேச சுப்ரபாதம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
03:08

1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

2. எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

3. போர்புரிந்து மதுகைடபர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் (2)

4. திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருளி புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்

5. தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

6. ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்

7. நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

8. நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

9. எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து(உ)ம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

10. வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்

11. தனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்

12. பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்

13. வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

14. மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோலேறி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்

15. திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

16. அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன், அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும் நின்
திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்

17. திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பு(உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்

18. சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

19. நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

20. எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்

21. மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்

22. பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்

23. திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்

25. ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

26. அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்

27. நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்

28. திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

29. விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்ரம்

1. மலர் மேல் உறை மாதவி மார்பகத்தே
குலவும் ஒரு குங்கும நீலவனே
மலர் தாமரைக் கண்ணுடை நாயகனே
நலமே பெறக் காத்தருள் வேங்கடவா (2)

2. மறை நான்முக ஐமுக ஆறுமுகப்
பெரியோர்களின் சீர்மிகு தலைமணியே
சரணாகதி யென்பவர்க்கன்புறவே
பெரும்பேர் நிதி காத்தருள் வேங்கடவா

3. பொது எல்லைகள் தாண்டிய பாவமதை
நிதமே புரிந்தின்னமும் புரிவதிலே
அதிவேகமே கொண்டுள எங்களையே
இதமாகவே காத்தருள் வேங்கடவா

4. அருள் ஈ வதில் ஆர்வமாய் நீ அடியார்
வரம் வேண்டியதை விட ஈபவனே
பெரும் நான்மறை ஓதிடும் ஓர் பொருளே
திருமார்பனே காத்தருள் வேங்கடவா

5. நயம் சேர் இசைக்குங் குழல் இன்னமுதால்
வயமாயிடுங் கோபியர் சூழ்பவனே
மயல் காமனின் பேரெழில் கோடி பெரும்
முயல்வே யெமைக் காத்தருள் வேங்கடவா

6. பலர் போற்றிடும் பேரருள் மூர்த்தியனே
நலமே புணர் சீதையின் நாயகனே
தளிர் மேனியனே ஒரு வில்லவனே
ஒளியே எமைக் காத்தருள் வேங்கடவா

7. இருதாமரை பூத்திடும் சந்திரனாய்
திரு சீதையின் கேள்வனாய் நின்றவனே
இருள் ராவணனுக்கொரு சூரியனே
சரணா யினோம் காத்தருள் வேங்கடவா

8. நெறியாரடங்கின் உறை எளியவனே
திருத்தாயினைத் தேவியாய்ப் பெற்றவனே
பிறர் யாருடை தாளையும் வணங்கிலமே
பெரியோய் எமைக் காத்தருள் வேங்கடவா

9. திருவேங்கடேசா நாதனே நாதன் நீ
ஒரு வேங்கடேசா உன்னையே எண்ணினோம்
பெருவேங்கடேசா நின்னையே நின்னையே
அருள் வேங்கடேசா அருள் வேங்கடவா (2)

10. நெடுநாள் வரை யாம் உனை தொழுவதற்கே
முடியாமையால் இன்றுனைத் தொழப் புரிந்தோம்
அடி போற்றிடும் நித்தியர்க்கருள்வது போல்
அடியேமையும் காத்தருள் வேங்கடவா

11. அறியாமையால் புரி தீவினை புரியாதுளத் தற நீக்கிடு
பொறுத்தே அருள் பொறுத்தே அருள் பெருமாமணி வேங்கடவா (2)

ஸ்ரீவேங்கடேச ப்ரபத்தி

1. வேங்கடத்தான் விரிமார்பில் விழைந்தமர்ந்த கருணையளே
பூங்கமலத் தளிர்க்கரத்தால் பொறுமை வளர் பூதேவி
ஓங்கிய சீர் குணம் ஒளிரும் உயர்த்தனிப்பேர் தவத்தாயே
வேங்கடத்தான் திருத்தேவி நின் பாதம் சரண் புகுந்தோம் (2)

2 கருணையெனும் திருக்கடலே காத்தளிக்கப் படைத்தவனே
பெருந் தாயைப்பிரிந்தறியாப் பெரியோனே வல்லவனே
ஒரு முதல்வா பாரிஜாத உயர்மலரே துயர்களையும்
திருவடிகள் பற்றி உய்ய வேங்கடவா சரண் புகுந்தோம் (2)

3. ஒன்றுடனொன்று ஒத்திணைந்த ஒப்புயர்வில் அடியவர்தான்
அன்று முதல் இன்று வரை அருளமுதாய்த் தொழத் தகுந்த
நன்மணங்கள் வாய் அவிழ்ந்த நறுமலர்கள் மிக நிறைந்த
நின்னடிகள் தஞ்சமென வேங்கடவா சரண் புகுந்தோம் (2)

4 அன்றலர்ந்து மிகச் சிவந்தே அருங்குளத்தில் பறிபடாது
நின்றிருக்கும் தாமரை நின் திருவடிக்கு நிகராகும்
என்றுரைக்கும் உறையும் ஒரு மிக முரட்டு கல்லுரையாய்
தென்படுமாறு உளதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

5. கொடி அமிர்தத் திருகலசம் கற்பதரு தாமரைப் பூ
நெடிய குடை சங்கு சக்கரம் வஜ்ஜிரத்தோடு அங்குசமாம்
அடையாள ரேகைகள்தான் படர்ந்தமைந்த நினது திரு
அடியிணைகள் பற்றி நின்றே வேங்கடவா சரண் புகுந்தோம்

6. உள்ளங்கால் பேரொளிக்கு பத்மராக ரத்தினங்கள்
ஒள்ளிய சீர் புரவடி போல் இந்த்ர நீல ரத்தினங்கள்
வெள்ளிய நல் நகங்களுக்கு வெண்மதிகள் தோற்றோட
உள்ளிவந்தோம் நின்னடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

7. வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டரிய திருவடியை
பூக்கமலத் திருத் தேவி தளிர்க்கரத்தால் ஆசையுடன்
ஏற்புற்றே வருடிடவும் வாட்டமுறும் மெல்லடியை
நோக்க அருள் பொழியடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

8. மன மகிழ்ந்து திருமகளும் மண்மகளும் நப்பினையும்
நனைவிழந்து துளிர் தளிர்க்கும் தன் ரோஜா திருக்கரத்தால்
தினம்வருட அவர் கரத்துத் திருச் சிவப்பு தொற்றியதோ
எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

9. நினை வணங்கு சிவ பெருமார் நெடுமடியில் நவரத்ன
மணிகளிடை விதை முளைபோல் கதிர் ஒளிகள் கிளர்ந்தெழுமே
கணங்களென கற்பூர ஆர்த்தியென மணி ஒளியைத்
தினமேற்கும் நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

10. எவ்வடிகள் வேதமெலாம் மிகப் புகழும் திருவடிகள்
எவ்வடிகள் ஞானியர்க்குத் தேன் பெருக்கும் செவ்வடிகள்
எவ்வடிகள் புகழ் என நின் மலர்க்கரந்தான் சுட்டடிகள்
அவ்வடியை அடைந்துய்ய வேங்கடவா சரண் புகுந்தோம்

11. தேர்த் தட்டில் பார்த்தனுக்குச் சரண் புகுவாய் என உரைத்து
நேர்த்தி மிகக் காட்டிய தெத்திருவடியோ அவ்வடியே
கீர்த்திமிகு வேங்கடத்தில் வலக் கரந்தான் காட்டடிகள்
பார்த்தனைப் போல் பயன் பெறவே வேங்கடவா சரண் புகுந்தோம்

12. உனை நினைத்தே உன்னிடத்தே ஆள்பவர் தம் மனத்திடத்தும்
தினமவர் தாம் போற்றுமறை முடியிடத்தும் வேங்கடத்தும்
எனது பெரும் தலையிடத்தும் காளிங்கன் தலையிடத்தும்
மனத்திடத்தும் புகுமடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

13. வாட்டமின்றித் தரையில் நிறை மணமலர்கள் சூழ்ந்தமைய
நீட்டிய பல் சிகரத்து வேங்கடத்தின் அணியாகி
நாட்டமுறு மனம் ஈர்த்து நல்லடியார்க்கின்புணர்த்து
வீட்டின்பம் தருமடியை வேங்கடவா  சரண் புகுந்தோம்

14. சரண் புகுவார் முதன் முதலில் அறிந்தறியக் கற்றனவாய்
ஒரு சிறுபைங் குழவிக்குத் தாயருள் போல் அமைந்தனவாய்
பெரும் அமுதாய் வேறெதற்கும் ஒப்புமையை ஒழித்தனவாய்
இருந்தருள் நின் அடிகளிணை வேங்கடவா சரண் புகுந்தோம்

15. தூய்மனத்துப் பெருந்தகையோர் தொழுதேத்தும்மலர்தாளாய்
வாய்த்துளயிப் பிறவியெனும் பெருங்கடலைத் தாண்ட வைப்போய்
தாயனைய மாமுனிவர் எமக்குணர்த்தி சரண்புகுவீர்
போய் என்ற நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

16. சரண்புகு நின் அடியவர்தம் குறை மறைத்து நீயருளப்
பெருந் துணைகள் பல புரிந்து குற்றேவல் கொண்டருளும்
திருத்தாய்வாழ் அருள் மார்பா உமக்கே யாம் ஆட்படுவோம்
திருவடிக்கே பணிந்துய்வோம் வேங்கடவா சரண் புகுந்தோம் (2)
-----------
ஸ்ரீவேங்கடேச மங்களாசாஸனம்

1. திருக்கேள்வா மங்களங்கள் பொழிபவனே பொலிபவனே
பெரு நெறியே ஸ்ரீனிவாசா வேங்கடவா மங்களங்கள் (2)

2. பெருந்தவத்தாய் மைய்யலுறப் பேருலகைப் புரந்தருளும்
திருப்புருவ அருள் கண்ணா வேங்கடவா மங்களங்கள்

3. வேங்கடத்து மலைப்பொலி சேர் விழையணியாம் திருத்தாளாய்
ஓங்கிய சீர் மங்களத்தாய் வேங்கடவா மங்களங்கள்

4. எல்லார்க்கும் எப்பொழுதும் எழில் மயக்கம் அளித்தருளும்
நல்லழகுப் பெருமானே வேங்கடவா மங்களங்கள்

5. ஆழிதணையாய் குற்றமில்லாய் மாற்றமில்லாய் நிறைமகிழ்வே
எழில் ஞான உயிர் முதலே வேங்கடவா மங்களங்கள்

6. எல்லாமும் அறிந்தவனே படைப்பவனே ஆள்பவனே
நல்குணனே எளிமையனே வேங்கடவா மங்களங்கள்

7. பரப்ரம்மா பரமாத்மா விழைந்தனர்கள் பெற அருளும்
பரம் பொருளே பரதத்வா வேங்கடவா மங்களங்கள்

8. தவமேனித் தனியழகைச் சலித்தலின்று தியானிப்போர்
தெவிட்டாது துய்த்துணரும் வேங்கடவா மங்களங்கள்

9. சரண் புகுவார் மோட்சநிதி தனதடியை என வலது
கரத்தாலே காட்டியருள் வேங்கடவா மங்களங்கள்

10. பெருங் கருணைப் பேரமுதப் பேராற்றின் அலைகளெனும்
திருவிழியால் துயர் நீக்கும் வேங்கடவா மங்களங்கள்

11. திருமாலை பட்டாடை திரு அணிகள் பெருமை பெற
வரு பெறுவன் துயர் தணிக்கும் வேங்கடவா மங்களங்கள்

12. அருள் பொழிய வைகுந்தம் தவிர்ந்தருளி கோனேறித்
திருக் கரையில் புணர்ந் தாடும் வேங்கடவா மங்களங்கள் (2)

13. மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக்
கணம் புரந்து களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்

14. ஈங்கெங்கள் குருமுதலோர் இயம்பியதை மங்களத்தாய்
ஓங்கி உயர் வேங்கடவா உனக்கென்றும் மங்களங்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 
temple news
பங்குனி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar