உப்பூர் வெயிலுகந்த கோயில் சதுர்த்தி விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2018 01:09
உப்பூர்;ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நாளை அனுக்ஞை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில் ராமபிரானால் பூஜிக்கப்பட்ட ஆலயம் என்பதால் கோயில் பிரசித்திபெற்று விளங்கி வருகிறது. மேலும் பகல் முழுவதும் மூலவர் மீது சூரிய ஒளி படும்படி கருவறை அமைந்துள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். சதுர்த்தி விழா நாளை (செப்.3) மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் ( செப்.4 ) காலை 8:45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் தொடர்ச்சியாக செப். 11 ல் விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டமும் நடைபெற்று, செப். 13ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் பழனிவேல் பாண்டியன்,பொறுப்பாளர் சந்திரசேகரன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.