பதிவு செய்த நாள்
02
செப்
2018
01:09
பெரம்பலுார்: செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிசேக விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 29ம் தேதி காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்து, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுடன், புனித நீர் குடங்களை பக்தர்கள் தண்டாயுதபாணி மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுவாமிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், அஸ்த்ர ஹோமம், நவகிரக ஹோமம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை, எஜமான் அனுமதி பெறுதல், ஆச்சாரியார் அழைப்பு பூர்வாங்க பூஜை, மிருத்சங்கிரஹனம், அங்குரார்பனம் மற்றும் 6 கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:45 கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணியளவில் ராஜகோபுரம் விமான கலசம், மூலவர் விமான கலசம், பரிவார விமான கலசம் உள்ளிட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.