பதிவு செய்த நாள்
03
செப்
2018
12:09
புதுடில்லி : திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு, விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர், 16ம் நுாற்றாண்டில் நன்கொடையாக அளித்த நகைகள் எங்கே என, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு, தலைமை தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை, புராதன மற்றும் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி, பி.கே.எஸ்.ஆர்.ஐயங்கார் என்பவர், பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அளிக்கக் கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், அவர் கோரியிருந்தார். முறையான பதில் கிடைக்காததால், தலைமை தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது: திருப்பதி கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோவில்கள், 1,500 ஆண்டுகள் பழமையானவை. திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளை, இவற்றை முறையாகப் பராமரிக்கவில்லை. இந்தக் கோவிலை, புராதன மற்றும் தேசியபாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என, 2011ல் ஒரு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோவிலுக்கு சொந்தமான, புராதன நகைகளும் முறையாக கணக்கில் வைக்கப்படவில்லை. கோவிலின் முக்கிய வாசலுக்கு எதிரே இருந்த, 15ம் நுாற்றாண்டில், ராஜா சலுவா மல்லேதேவரா மகாராஜ் அமைத்த, ஆயிரங்கால் மண்டபத்தை, எந்தக் காரணமும் இல்லாமல் இடித்துள்ளனர். இந்தக் கோவிலை, மாநில அரசுடன் இணைந்து பராமரிக்க வேண்டியது, மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறையின் கடமை. ஆனால், திருப்பதி தேவஸ்தானத்தில் பொறுப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் தான், அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். திருப்பதி கோவிலை, புராதன மற்றும் தேசிய பாரம்பரிய சின்னமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர், ஸ்ரீதர் ஆச்சார்யலு, தன் உத்தரவில் கூறியதாவது: திருப்பதி கோவிலை, 2011ல் ஆய்வு செய்த ஐதராபாத் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனர், ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். 16ம் நுாற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் இந்தக் கோவிலுக்கு, நகைகளை நன்கொடையாக அளித்தது தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் கோவிலில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவில் நகைகள் தொடர்பாக, 1952ல் இருந்து தான், திரு ஆபரண பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டில், கிருஷ்ண தேவராயர் அளித்த நகைகள் குறித்து, எந்தத் தகவலும் இல்லை; அப்படியென்றால், அந்த நகைகள் எங்கே? கோவிலின் நகைகள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள், டி.பி. வாத்வா, ஜகன்னாத ராவ் ஆகியோர் அளித்த பரிந்துரைகள், ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்தப் பரிந்துரைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? திருப்பதி கோவிலை, புராதன மற்றும் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? இது குறித்து திருப்பதி தேவஸ்தானம், பிரதமர் அலுவலகம், மத்திய கலாசார அமைச்சகம், தொல்லியல் துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.