பதிவு செய்த நாள்
03
செப்
2018
04:09
தர்மபுரி: ஆவணி மாத, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த, தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சாம்பல் பூசணியில் தீபமேற்றி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, அஷ்ட பைரவ யாகம் நடந்தது. தொடர்ந்து, அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட, யாகங்கள் நடந்தன. பின், 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. மூலவருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, சுவாமி, கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சாம்பல் பூசணியில் தீபமேற்றியும், கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.