ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் கோயில் சதுர்த்தி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2018 12:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நேற்று (செப்., 4ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோயில் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபட்டு வருவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
இந்த கோயிலில் சதுர்த்தி விழாவின் தொடக்கமாக நேற்று (செப்., 4ல்) காலை 8:45 மணிக்கு கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து மாலையில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலையில் கேடகம், சிம்ம, மயில், யானை, ரிஷப, காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் எட்டாம் நாளான செப். 11 ல் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக் கல்யாணமும், மறு நாள் தேரோட்டமும் நடைபெற்று, செப். 13ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.