பதிவு செய்த நாள்
12
செப்
2018
10:09
சபரிமலை: கேரளாவில், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பம்பையை, தற்காலிகமாக சீரமைத்து, வரும், 16ம் தேதி முதல், பக்தர்களை அனுமதிக்க, தேவசம்போர்டு திட்ட மிட்டுள்ளது. கேரளாவில், சமீபத்தில் பெய்த பெருமழையால், சபரிமலை அய்யப்பன் கோவிலின் அடிவார பகுதியான, பம்பை உருக்குலைந்துள்ளது. மலைபோல மணல் குவிந்துள்ளது.பக்தர்கள் தங்கும் ராமமூர்த்தி மண்டபம், தகர கொட்டகைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.
அன்னதான மண்டபம் பழுதடைந்துள்ளது. பம்பையை கடக்க உதவும் இரண்டு பாலங்களிலும் மணல் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.மண்டல, மகரவிளக்கு சீசன் துவங்க, 68 நாட்கள் மட்டுமே உள்ளதால், முழு வீச்சில் பணிகள் நடக்கின்றன. புரட்டாசி பூஜைக்காக, வரும், 16ல், மாலை 5.00 மணிக்கு நடை திறக்கிறது. ஏற்பாடுகள் குறித்து, தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் கூறியதாவது:வரும், 16- முதல், சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப் பட்டுள்ளது. சீசனுக்கு முன், பம்பை சீரமைக்கப்பட்டு, போதிய வசதிகள் செய்யப்படும். தற்காலிக கடைகள்அனுமதிக்கப்படும்.பக்த்கள், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு, பம்பைக்கு அரசு பஸ்சில் வந்து செல்ல வேண்டும். இம்மாதம் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.