வடமதுரை: வடமதுரை பகுதியில் சதுர்த்தி விழாவிற்காக 72 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.
வருகிற செப்.13ல் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வடமதுரை ஒன்றியத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி சார்பில் 72 இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக தற்போதே பழநி பகுதியில் தயாரிக்கப்பட்ட காகித கூழ் விநாயகர் சிலைகள் வடமதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மூன்றரை, ஐந்தரை, ஏழரை, ஒன்பதரை அடிகள் என 4 வித உயரங்கள் கொண்ட சிலை வடமதுரைக்கு சில நாட்களுக்கு முன்னரே வந்து சேர்ந்தன. இந்த சிலைகள் போலீசாரின் அனுமதி பெற்ற இடங்களுக்காக அந்தந்த ஊர் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் வாங்கி செல்கின்றனர்.
கட்சி நிர்வாகிகள் கூறுகையில், சிலைகள் அனைத்தும் செப்.13-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு போலீசாரின் அனுமதி பெற்ற நாளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.
குறிப்பிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். மாசுக்கட்டுப்பாடு துறை வழிகாட்டுதல்படி காகித கூழால் தயாரிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் எளிதல் கரைந்துவிடும். சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காது என்றனர்.