பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், இன்று, சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன், பெரிய மாந்தோப்பு இருந்தது. அங்குள்ள மரத்தின் அடியில், சுயம்புவாக விநாயகர் தோன்றினார். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, விநாயகரை வழிபாடு செய்ய துவங்கினர்.தொடர்ந்து, கூடுவாஞ்சேரி என்.ஜி.ஓ., காலனி, ரயில்வே காலனி பகுதியில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் மற்றும் லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவிலை கட்டினர். இதன் திருப்பணிகளை, கிருபானந்த வாரியார் துவக்கி வைத்தார்.இங்கு, ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தி பெருவிழா நடைபெறுகிறது. இன்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.காலை, 11:00 மணிக்கு, 1,008 மோதக நாம அர்ச்சனையும், மாலை, 4:00 மணிக்கு, உற்சவ மூர்த்திக்கு, மோதக அர்ச்சனையும் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் சாற்றப்படுகிறது.தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், முத்துக்குமார சிவாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.