பதிவு செய்த நாள்
14
செப்
2018
11:09
திருப்புத்தூர்:சிவகங்கை மாவட்டம்,பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தீர்த்தவாரியுடன் சதுர்த்தி விழா நிறைவடைந்தது.
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செப்.,4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம் திருநாளில் கஜமுகாசூர சம்ஹாரமும், ஒன்பதாம் திருநாளில் தேரோட்டமும், மூலவர்
சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தலும் நடந்தன.நேற்று (செப்.,13ல்) அதிகாலை 4:00 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் துவங்கின. மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9:30 மணிக்கு உற்ஸவ விநாயகர் சர்வ அலங்காரத்தில் கோயில் திருக்குளத்தின் தெற்கு படித்துறையில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு கோயில் தலைமைக்
குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சோமசுந்தர குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் ஆகியோரால் அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன.
காலை 10:13 மணிக்கு அங்குசத்தேவர் குளத்தில் மும்முறை மூழ்கி தீர்த்தவாரி நடந்தது. திரளாக பக்தர்கள் குளத்தைச் சுற்றி நின்ற தீர்த்தவாரியை தரிசித்தனர்.
கோயில் அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார், அரிமழம் சிதம்பரம் செட்டி யார் தீர்த்தவாரியில் பங்கேற்றனர். தொடர்ந்து அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர், உற்சவர் பிரகார வலம் வந்து கோயில் எழுந்தருளினர்.
மதியம் 2:15 மணிக்கு மூலவருக்கு 13 கிலோ எடையுள்ள முக்குறுணி கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவில் சுவாமிகள் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தன.