பதிவு செய்த நாள்
14
செப்
2018
05:09
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளை விநாயகர், சித்தி விநாயகர், செல்வ விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் விநாயகருக்கு 16 வகை அபிஷே கம் நடந்தது.
சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயிலில் 9 பிரமாண்ட பொம்மை யானைகள், இசைக் கருவிகள் வாசிக்கும் விநாயகர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் தேர் பவனி, வீதியுலா நடந்தது.
* பழநி முருகன்கோயில் மலையில் ஆனந்த விநாயகருக்கு வருடாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கவசம் சாத்தி சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இதேப்போல, காந்திரோடு பட்டத்து விநாயகர் கோயில், சண்முகபுரம் தமிழ் இலக்கியமன்ற சித்தி விநாயகர் கோயில் விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை, அபிஷேகம் நடந்தது. விஸ்வ இந்து பரிசத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கணபதி பூஜை செய்து, பல்வேறு இடங்களில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகளை எடுத்து செல்லப்பட்டன.
* கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சதுர்த்தி சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
*செம்பட்டி, கோதண்டராமர் கோயிலில், விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.
* நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வளாகத்தில் உள்ள சக்திவிநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், புஷ்பம், தயிர், தேன், திருமஞ்சணம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அருகம்புல், எருக்கம் பூ உள்ளிட்ட அலங் காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு கொழுக்கட்டை, பழங்கள்
படைத்து மகா தீபாராதனை நடந்தது.
இதே போல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூகைள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பாச்சலூர், கும்பறையூர், பூலத்தூர், கே.சி.பட்டி, மஞ்சள்பரப்பு, பெரியூர் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தாண்டிக்குடியில் நடந்த விழாவில் மின்ரதத்தில் விநாயகர் சுவாமி ஊர்வலம் நடந்தது. விழாவில் வலுக்கு மரம் ஏறுதல், விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
*ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மொத்தம் 103 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டன. இவை ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை மற்றும் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
* வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் கற்பக விநாயகர், மேலமந்தை தெரு மயில்விநாயகர், விசாலாட்சி அம்மன், மாரியம்மன், பெருமாள் கோயில்கள், எட்டு அடி பிள்ளையார் கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பொறி, கடலை, சுண்டல், கொழுக்கட்டைகள் படைத்து வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழக டிப்போ, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கீழக்கோயில்பட்டி, விருவீடு, கண்ணாபட்டி, செக்காபட்டி கிராமங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள், மாரியம்மன், காளியம்மன், மயில் முருகன் அணைப்பட்டி, ஆஞ்சநேயர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.