பதிவு செய்த நாள்
15
செப்
2018
10:09
நாகப்பட்டினம்: நாகையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் வீதியுலா நடந்தது. நாகையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து, விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. 32 அடி உயரத்தில், பாரிஸ் பிளாஸ்டரால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, வீதியுலா நடந்தது. நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட வீதியுலாவை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கேரளா செண்டை மேளம், கதகளி, கரகாட்டம் உட்பட, 30க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் வீதியுலாவில் அணி வகுத்து வந்தன.நாகையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த விநாயகர் ஊர்வலம், நேற்று காலை நாகூர் வெட்டாற்று பகுதியை வந்தடைந்தது.பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலை, பைபர் படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நாகையில் இருந்து நாகூர் வரை நடந்த விநாயகர் வீதியுலாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.