நிலக்கோட்டையில் நடராஜர் கோயில் திருப்பணி மீண்டும் துவங்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2018 03:09
நிலக்கோட்டை: நிலக்கோட்டை நடராஜர் கோயில் திருப்பணியை அறநிலையத்துறை மீண்டும் துவக்க வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.
நிலக்கோட்டையில் இந்து அறநிலையத்துறைக்குட்பட்டது அகோபில நடராஜர் கோயில் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த 7 ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின.
பணிகளை ஒருங்கிணைத்த முக்கிய நிர்வாகி ஒருவர் இறந்ததால் பாதியில் நின்றது, 3 ஆண்டு களுக்குப் பின் மீண்டும் பணிகள் துவங்கியது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் புதிய சிலைகள் வைப்பதற்கு அறநிலையத்துறையை திருப்பணிக் குழுவினர் நாடினர்.
திருப்பணிக்கு தடை: அறநிலையத்துறை புதிய சிலை வைப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. ஆகம விதிகளின் படி பழைய ஐம்பொன் சிலைதான் வைக்க வேண்டும் என அரசு ஸ்தபதி கூறியதாகத் தெரிகிறது. ஆனால், திருப்பணிக் குழுவினர் புதிய சிலைகள் வடிவமைத்து அதற்கான பணிகளைச் செய்தனர்.
இறுதியில் அறநிலையத் துறைக்கு தெரிந்து திருப்பணிக்கு தடை விதித்தது. கோபுர சிலைகள் உருவாக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆனதாலும், வண்ணம் பூசாததால் உறுதித்தன்மையை இழந்து அனைத்தும் சேதமடைந்து வருகின்றன. அறநிலையத்துறையினர் மீண்டும் பணிகளை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.