பதிவு செய்த நாள்
24
செப்
2018
02:09
சேலம்: பெருமாள் கோவில்களில், ஆண்கள் மட்டும் விரதமிருந்து வழிபாடு நடத்தும், அனந்த பத்மநாப விரதம் கொண்டாடப்பட்டது. மகாபாரத போரில் வெற்றி பெற்று, இழந்த ராஜ்ஜி யத்தை மீட்க, பெருமாள் மீது, பாண்டவர்கள் விரதமிருந்து வழிபட்ட, அனந்தபத்மநாப விரதத்தை, இன்றும் (செப்., 24ல்) ஆண்கள் கடைப்பிடிக்கின்றனர். அதையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று (செப்.,23ல்), உற்சவர் பெருமாள், அனந்தசயன திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
காலை, கோவிலுக்கு வந்த ஏராளமான ஆண்கள், பூஜித்த நோன்பு கயிறுகளை, கைகளில் கட்டி, விரதத்தை தொடங்கினர். மதியம், வீட்டிலுள்ள பெருமாள் படங்களுக்கு, பால் பாயாசம், இனிப்பு படைத்து, பூஜை செய்து, விரதத்தை முடித்தனர். ஆண்கள், குடும்பம் தழைக்க வேண்டி, அனந்தபத்மநாப விரதம் இருக்கின்றனர். இதேபோல், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், சயன திருக்கோலத்தில் சுவாமி காட்சியளித்தார்.