பதிவு செய்த நாள்
25
செப்
2018
10:09
நாகப்பட்டினம்: நாகை அடுத்த திருக்கண்ணபுரம், சவுரிராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற உதய கருட சேவையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாகை அடுத்த திருக்கண்ணப்புரத்தில் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்ய தேசமான சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மிக பழமையான பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ,ஆண்டு தோறும் கோவிலில் ஏற்படும் தோஷங்கள் நீங்க, புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி நட்சத்திரத்தில், பவித்திர உற்சவம் நடைபெறும். இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகங்கள், வேதபுராணங்கள் நடந்தன. தொடர்ந்து பெருமாள் தாயார்களுடன் பட்டுமாலை அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். பின், வராக அவதாரத்தில் பெருமாள் பூலோகத்தில் அருள்பாலித்தப் போது, பெருமாள் உடலில் அரும்பிய வேர்வைத் துளிகளால் உருவான நித்ய புஷ்கரணி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள், பட்டுமாலைகளை பெருமாளுக்கு சாத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர். நிகழ்ச்சியில் கோவில் முன்னாள் அறங்காவலர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் பரமானந்தம் உட்பட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.