பதிவு செய்த நாள்
25
செப்
2018
12:09
வடலுார்: வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோவிலில், 2 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபம், நான்கு மாதங்களில் இடிந்து விழுந்துள்ளது. கடலுார் மாவட்டம், வெங்கடாம்பேட்டையில் இந்து அறநிலையத்துறையின் கீழ், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், கோபுரம், கருவறை, ஊஞ்சல் மண்டம் ஆகியவை இடிந்து பாழடைந்த நிலையில், பூஜை நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், ஜெர்மனியில் வசித்து வந்த, பாஸ்கரன் சுவாமி என்பவர் இந்து அறநிலையத் துறையில் அனுமதி பெற்று, கோவிலை புனரமைத்தார். மூலவர் சன்னதி, ஆண்டாள் சன்னதி சீரமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘இக்கோவிலின் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும், 50 அடி உயரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த ஊஞ்சல் மண்டபத்தை சீரமைக்க வேண்டும்’ என அறநிலையத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையையேற்று, இந்து அறநிலையத்துறை, ஊஞ்சல் மண்டபத்தை சீரமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இரண்டு ஆண்டுகளாக ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன், பணி நிறைவடைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், கருங்கல் உத்தரத்தில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி, ஊஞ்சல் மண்டபத்திற்குள் யாரும் செல்லாத வகையில், தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதையொட்டி, சுவாமி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முடிந்து, கோவில் உள்ளே சுவாமியை எடுத்துச் சென்ற நிலையில், 11:00 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தின் மேல்தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதியில் உள்ள உத்தரத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. 2 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைத்த மண்டபம் இடிந்து விழுந்ததில் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.